Published : 12 Aug 2020 07:36 AM
Last Updated : 12 Aug 2020 07:36 AM
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வணிகர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் முகாம் நாளை தொடங்க உள்ளதாக பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோயம்பேடு காய்கறி, பூ, பழம் வணிக வளாகம் மற்றும் உணவு தானிய வணிக வளாகம், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சுற்றுலா மையங்கள், பொது போக்குவரத்து, தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலைமையை பரிசீலித்து தமிழக அரசு இவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மத்திய அரசு இ-பாஸ் அவசியமில்லை என்று அறிவித்த பின்னரும் மாநில அரசு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்திருப்பது ஏழை, எளிய ஊழியர்கள் மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதை கவனத்தில் கொண்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் சென்னை தியாகராய நகர், கொத்தவால்சாவடி, திருமழிசை காய்கறி சந்தை போன்ற பகுதிகளில் வணிகர்களுக்கு தொற்று எதிர்ப்பு திறன் பரிசோதனைகளை அரசு அங்கீகரித்துள்ள பரிசோதனை மையத்தோடு இணைந்து வரும் வியாழக்கிழமை (நாளை) முதல் தொடங்க உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT