Published : 12 Aug 2020 07:33 AM
Last Updated : 12 Aug 2020 07:33 AM

வண்டலூரில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய மேம்பாலப் பணி அடுத்த மாதம் நிறைவுபெறும்: நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு

வண்டலூரில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் போக்க ரூ.55 கோடிமதிப்பீட்டில் உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்படும் என, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

2018-ல் பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டு 6 வழிப்பாதையுடன் 711 மீ. நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் சாலையின் நடுவே 9 தூண்களுடன் கூடிய உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகளில் நிர்வாகத்துக்கும், ஒப்பந்ததாரருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேம்பாலப் பணியில் ஒரு சில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதிகபட்சம் ஒரு மாதத்தில் மேம்பால பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோல ஒரே தூணில் 6 வழிப் பாதையாக உயர்நிலை மேம்பாலம் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வண்டலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் கரோனா ஊரடங்கு காலத்திலும் நிறுத்தப்படாமல், தொடர்ந்து நடைபெற்றது. ஒரு மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x