Last Updated : 11 Aug, 2020 01:57 PM

 

Published : 11 Aug 2020 01:57 PM
Last Updated : 11 Aug 2020 01:57 PM

புதுச்சேரியில் புதிதாக 276 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 2 பேர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 90-ஐக் கடந்தது

புதுச்சேரியில் இன்று புதிதாக 276 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,900 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.11) கூறியதாவது:

"புதுச்சேரியில் 967 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 241 பேர், காரைக்காலில் 30 பேர், ஏனாமில் 5 பேர் என மொத்தம் 276 பேருக்குத் (28.5 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 154 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 48 பேர் ஜிப்மரிலும், 39 பேர் 'கோவிட் கேர் சென்ட'ரிலும், 30 பேர் காரைக்காலிலும், 5 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள 'கோவிட் கேர் சென்ட'ரில் ஒருவர் என 2 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கடந்த 5 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள 'கோவிட் கேர் சென்ட'ரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார்.

அதுபோல் நேற்று மேரி உழவர்கரை குண்டுசாலை பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆண் நபர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்தார். அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 5,900 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 371 பேரும், ஜிப்மரில் 317 பேரும், 'கோவிட் கேர் சென்ட'ரில் 365 பேரும், காரைக்காலில் 161 பேரும், ஏனாமில் 114 பேரும், மாஹேவில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 874 பேர், ஏனாமில் 72 பேர் என 946 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 2,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 55 பேர், ஜிப்மரில் 20 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 72 பேர், ஏனாமில் 25 பேர் என மொத்தம் 172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,532 ஆக அதிரித்துள்ளது.

இதுவரை 48 ஆயிரத்து 748 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 41 ஆயிரத்து 941 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 386 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x