Last Updated : 11 Aug, 2020 01:17 PM

 

Published : 11 Aug 2020 01:17 PM
Last Updated : 11 Aug 2020 01:17 PM

கரோனா தடுப்புப் பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

கரோனா தடுப்புப் பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை, மக்கள் நெருக்கம் மற்றும் நோய்த்தொற்று அறிகுறிகளின் அடிப்படையில் அல்லாமல் பொதுவாக ஒவ்வொரு வட்டார அளவில் தினமும் சுமார் 400 பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அளவில் குறியீடு நிர்ணயம் செய்வதும் அக்குறியீட்டை அடைய முடியாத மருத்துவர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற முறையில் பயமுறுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் கிராமங்கள் தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும் செல்லும் மருத்துவர்களுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவ்வாறு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத சூழலில் சில சமயங்களில் மருத்துவர்களும் மற்ற ஊழியர்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் அவலம் ஏற்படுகின்றது.

கரோனா வார்டுகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தனிமைப்படுத்துதலுக்கான தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகள் மாவட்டம் முழுவதும் ஒன்றுபோல் தங்குதடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.

தற்போது சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள் ஏற்பாட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

கடந்த வாரம் விருதுநகர் அருகே மல்லாங்கினர், நரிக்குடி அருகே மினாக்குளம் கிராமத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவத்துறை ஊழியர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிக் கடுமையான தாக்குதல் நடத்திய கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், வரும் காலங்களில் கரோனா தடுப்புப் பணிக்கு செல்லும் மருத்துவக் குழுக்களுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x