Published : 11 Aug 2020 12:16 PM
Last Updated : 11 Aug 2020 12:16 PM

ரஷ்யாவில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்; உடல்களைத் தமிழகம் கொண்டு வர வேண்டுகோள்: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் டி.ஆர்.பாலு நேரில் வலியுறுத்தல்  

சென்னை

ரஷ்ய நாட்டில் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து திமுகவின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று காலை (11-8-2020) நேரில் சந்தித்து, ரஷ்ய நாட்டில் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டுமெனக் கடிதத்தின் மூலம் வலியுறுத்தினார்.

ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வோல்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரிழந்த, தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

மேலும், டி ஆர்.பாலு எழுதிய மற்றுமொரு கடிதத்தில், சென்னை கொளுத்துவஞ்சேரியைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் குமார், மலேசியாவில் நுழைவு விசா முடிந்த காரணத்தால், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டுமெனவும் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவன செய்வதாகவும், சந்தோஷ் குமார் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டி.ஆர் பாலுவிடம் உறுதி அளித்துள்ளார்''.

இவ்வாறு திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x