Published : 11 Aug 2020 07:47 AM
Last Updated : 11 Aug 2020 07:47 AM
கேட்பாரற்ற நிலையில், சாலையில் கிடந்த 40 கிலோ வெள்ளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளிக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை, நாயுடு அய்யாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஆதில் பாஷா (42). வெல்டிங் தொழிலாளியான இவர் கடந்த 8-ம் தேதி இரவு 8.45 மணியளவில் ராயப்பேட்டையில் இருந்து, செங்குன்றத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையில் சென்றபோது அங்கு கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 40 கிலோ உருக்கிய வெள்ளி இருந்தது.
இதையடுத்து ஆதில் பாஷா, சம்பந்தப்பட்ட பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு சாலையில் கிடந்த பை பற்றி தெரிவித்துள்ளார். அப்போது, தவறவிட்டது, பெரம்பூர், பட்டாளம் பகுதியைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சுபாஷ் ஜானா (48) என்பதும், அவர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கசென்றதும் தெரியவந்தது. அங்கு வந்து பையை ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து யானைகவுனிபோலீஸாரிடம் வெள்ளி ஒப்படைக்கப்பட்டது. அதை போலீஸார் சுபாஷ் ஜானாவிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நேர்மையாக நடந்து கொண்டஆதில் பாஷாவை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT