Last Updated : 10 Aug, 2020 07:11 PM

 

Published : 10 Aug 2020 07:11 PM
Last Updated : 10 Aug 2020 07:11 PM

பெரியாறு கால்வாய்க்கான நிலத்திற்கு இழப்பீடு இல்லை: 26 ஆண்டுகளாக போராடும் சிவகங்கை விவசாயிகள் 

சிவகங்கை பகுதியில் பெரியாறு பாசனக் கால்வாய்க்காக நிலம் கொடுத்தோர், அதற்கான இழப்பீடு கேட்டு 26 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய் பாசனத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. போதிய மழை இல்லாத காலங்களில் பெரியாறு நீர் கொண்டு வருவதற்காக 1994-ம் ஆண்டு சிவகங்கை பகுதியில் பாசனக் கால்வாய் அமைக்கப்பட்டது.

இதற்காக மதுரை மாவட்டம் மேலுாரில் இருந்து சிவகங்கை மறவமங்கலம் வரை 60 கி.மீ., க்கு வருவாய்த் துறையினர் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டன.

இதில் நன்செய் நிலங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டன. ஆலங்குளம், ஏ.புதுப்பட்டி, மகாசிவனேந்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நஞ்சை நிலங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டிற்காக 26 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கான கோப்பு மாயமானது.

இதனால் இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் சிவகங்கை அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வட்டாட்சியர் அறிக்கையை பெற்று இழப்பீடு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்காமல் கிராமமக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இழப்பீடு பெற போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சந்திரன் கூறுகையில், பல ஆண்டுகளாக கோப்பை காணவில்லை என்று கூறி வந்தனர். தற்போது நிதி வரவில்லை என்கின்றனர். நிலம் கொடுத்தோரில் பலர் வறுமையில் உள்ளனர். இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெரியாறு பாசனக் கால்வாய்க்கு நிலம் கொடுத்தோருக்கு இழப்பீடு கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிதி பெறப்பட்டதும் இழப்பீடு வழங்கப்படும்,’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x