Published : 10 Aug 2020 06:39 PM
Last Updated : 10 Aug 2020 06:39 PM

இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்க; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் சூதாட்டமும், லாட்டரிச் சீட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், சமீபகாலங்களில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடும் ஒரு மோசமான போக்கு தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது.

'ரம்மி விளையாட வாங்க' என விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட சூதாட்டம் ஆன்லைனில் கனஜோராக நடப்பதும், அதற்கு பிரபலங்கள் விளம்பரங்கள் கொடுப்பதும் சூதாட்டத் தடையைக் கேலி செய்வதாக உள்ளது.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் வாழ்க்கையை இந்த விளையாட்டு சீரழிக்கிறது. இளைஞர்களின் நேரத்தை வீணடிக்கிறது; சிந்திக்கும் திறனையும் இழக்கச் செய்கிறது.

படித்த பல இளைஞர்களும் இந்த ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுகின்றனர். தாங்கள் வாங்குகின்ற சம்பளத்தில் பெரும்பகுதியை இதில் இழக்கின்றனர். இதனால் எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட துர்பாக்கியமான நிலையும் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் இது குறித்து புகார் வருவதில்லை என்றும் அதனால் தங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான சர்வர்கள் (server) அமெரிக்காவில் உள்ளதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுவது ஏற்புடையதாக இல்லை.

ஏற்கெனவே கரோனாவில் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு குடும்பங்களை நிர்க்கதியாக்குகிறது.

எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமென மத்திய அரசையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x