Last Updated : 10 Aug, 2020 06:34 PM

 

Published : 10 Aug 2020 06:34 PM
Last Updated : 10 Aug 2020 06:34 PM

கிறிஸ்தவ தேவாலயங்களில் திருமணம் நடத்த அனுமதி வேண்டி முதல்வர் இல்லத்தில் மனு அளித்த ஆயர்கள்

பிரதிநிதித்துவப் படம்.

சேலம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்க வேண்டி, முதல்வர் இல்லத்தில் அதிகாரிகளிடம் ஆயர்கள் மனு அளித்தனர்.

சேலம் மாவட்ட தவ ஐக்கிய குழு சார்பில் ஆயர்கள் ஜவகர்வில்சன், ராபர்ட்கெவின், விக்டர்ராஜ் உள்ளிட்டோர் இன்று (ஆக.10) முதல்வர் பழனிசாமி இல்லத்துக்குச் சென்று, அங்குள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், "கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, திருமணங்கள் தேவாலயங்களில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆறு மாதமாக கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த அசாதாரணச் சூழலால் தேவாலயங்களில் திருமணம் நடக்காமல் இருந்து வருகிறது.

கிறிஸ்தவக் குடும்பங்களில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களின்படி, விதிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களில் திருமணம் நடத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயர்கள் கூறும் போது, "கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிறிஸ்தவக் குடும்பத்தினர் திருமணம் நடத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி தேவாலயங்களில் திருமணம் செய்து வைத்துப் பதிவு செய்யப்படும் முறை நடைமுறையில் உள்ளது. வேறு எங்கு வைத்தும் கிறிஸ்தவ குடும்பத்தினர் திருமணம் செய்ய முடியாது. இதனால், கடந்த ஆறு மாதங்களில் 2,000 கிறிஸ்தவ திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே, கிறிஸ்தவ மணமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு நெறிமுறை மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களில் திருமணம் நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x