

ஒரே நாளில் அதிகபட்ச மழை, போதிய வடிகால் இல்லாதே எமரால்டு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுக்கு காரணம் என்று, இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் எமரால்டு சத்யா நகர் வருவாய் நிலத்தில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது.
இப்பகுதியை ஆய்வு செய்து அவர் கூறும்போது, ‘காலநிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களால், நீர்சுழற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழை மேகக் கூட்டங்கள், அவலாஞ்சி பகுதியிலுள்ள காடுகளால் தடுக்கப்பட்டு, குறைவான நேரத்தில் அதிக மழை பெய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ரசாயனங்களால் எமரால்டு பகுதியில், மண் தன் சத்தை இழந்துள்ளது. இப்பகுதியில் நிலத்தடி நீர் செல்ல சரியான வடிகால் அமைப்புகள் இல்லாத தால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு விவசாயம், குடியிருப்பு அமைப்பது போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கும்.
வரும் ஆண்டுகளிலும் பருவமழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாதபோது, இதே போன்று குறுகிய காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பேரிடர்களை தவிர்க்கலாம்’ என்றார்.