Published : 10 Aug 2020 12:17 PM
Last Updated : 10 Aug 2020 12:17 PM

மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

மூணாறு நிலச்சரிவில் இறந்த கயத்தாற்றைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல் கூறியதுடன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3.5 லட்சம் உதவி செய்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமூடி தேனி தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சட்டப்பேரவை உறுப்பினரும், செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ இன்று காலை கயத்தாறு பாரதி நகருக்கு வந்தார்.

அங்கு உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பெற்றோரை இழந்து தவிக்கும் சரண்யா அன்னலட்சுமி விஜய் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது அங்குள்ள மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அவரிடம் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டி முடி தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு இன்று காலை வரை 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள். மேலும், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 28 பேரை தேடும் பணி நடைபெறுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களை இழந்து வாடும் அவர்களது குழந்தைகள், பெற்றோரை இழந்து வாடும் சரண்யா, அன்னலட்சுமி மற்றும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இழந்து தவிக்கும் விஜய் ஆகியோரின் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்து, கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்க தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிரந்தரமாக தங்குவதற்கு அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தனையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும்.

கேரள மாநில அரசு அங்குள்ள நிலைக்கு ஏற்ப இ-பாஸ் தருகிறது. கயத்தாறு சேர்ந்தவர்கள் அங்கு செல்வதற்கு தமிழக அரசு கேரள மாநில அரசிடம் பேசி இ- பாஸ் பெற்றுத் தந்தது. அங்கு நிலைமை சீரானவுடன், அங்கு உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இறுதிச் சடங்குங்கள் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அப்போது எத்தனை பேர் செல்ல வேண்டுமோ, அவர்களுக்கு அரசு மூலம் இ-பாஸ் பெற்றுத் தருவது மட்டுமின்றி வாகன வசதியும் செய்து தரப்படும்" என்றார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் சரண்யா, விஜய், ஆறுமுகம், முருகன் ஆகிய 4 பேருக்கு தலா ரூ.50,000-மும், அதுதவிர 4 பேருக்கு தலா ரூ.25,000-மும், வேன் செலவுக்கு ரூ.25,000, உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் பெற்றோருக்கு ரூ.25,000 என மொத்தம் ரூ.3 லட்சத்து 50,000 நிதியை அமைச்சர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

அமைச்சருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x