Published : 10 Aug 2020 07:04 AM
Last Updated : 10 Aug 2020 07:04 AM

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 56% அதிகம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக அதிகனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 151 செமீ மழை பெய்வதுவழக்கம். ஆனால் இந்த ஆண்டு 236 செமீ மழை, அதாவது வழக்கத்தைவிட 56 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோர பகுதியில்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 12 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களின் கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள்செல்ல வேண்டாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x