Published : 09 Aug 2020 02:39 PM
Last Updated : 09 Aug 2020 02:39 PM

அதிக பலத்துடன் ராஜபக்ச; இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும்: ராமதாஸ்

அதிக பலத்துடன் ராஜபக்ச பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும் என், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை:

"இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ச கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில், 150-க்கும் கூடுதலான இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை வரலாற்றில் கடந்த சில பத்தாண்டுகளில் எந்தக் கட்சியும் இந்த அளவுக்கு பெரும்பான்மை பெற்றது கிடையாது. நீண்ட காலத்துக்குப் பிறகு ராஜபக்ச சகோதரர்கள்தான் இந்த அளவுக்கு பெரும்பான்மையை வென்றெடுத்திருக்கின்றனர்.

இலங்கைத் தேர்தலில் பெரும்பான்மையை பெறுவதற்காக ராஜபக்ச சகோதரர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள்தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். இலங்கை மக்கள்தொகையில் தமிழர்களும், முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். இலங்கைத் தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெறுவது சாத்தியம் கிடையாது.

ஆனால், அதையும் கடந்து ராஜபக்ச சகோதரர்கள் பெரும்பான்மை பெற்றதற்குக் காரணம் இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் சிங்களர்களிடையே இனவெறியை வரலாறு காணாத அளவுக்குத் தூண்டியதுதான். அதுமட்டுமின்றி, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களர்களை அதிக அளவில் குடியேற்றம் செய்தும், தமிழர்களை அச்சுறுத்தியும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிங்களர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட ராஜபக்ச சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்றிருப்பதால், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை, நினைக்கும் வகையில் மாற்றும் வலிமை ராஜபக்ச சகோதரர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

அதைப் பயன்படுத்தி, 1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கை அமைதி உடன்பாட்டைத் தொடர்ந்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தை ரத்து செய்ய ராஜபக்ச சகோதரர்கள் தீர்மானித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் இந்திய வலியுறுத்தலின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தம் ஆகும். அதனடிப்படையில்தான் இலங்கையில் மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரசுகளின் மூலம் தான் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு, சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

13-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டால், வட கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தெருவிளக்கு போடுவதற்கும், குடிநீர் குழாய் அமைப்பதற்கும் கூட ராஜபக்சக்களைத்தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

தமிழர்களுக்குக் கிடைத்திருந்த குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் கூட பறிக்கப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, 13-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்; அதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச, அதிபராக அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் பதவி வகிக்கின்றனர். ராஜபக்சவின் சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மகன் நமல் ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை இலங்கை அரசு தடுத்து வந்தது.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேற்றவுடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டது. இப்போது இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் ஒரே குடும்பத்தின் கீழ், அதுவும் போர்க்குற்றங்களை நிகழ்த்திய குடும்பத்தின் கீழ், வந்துவிட்ட நிலையில், இனி ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும், அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x