Last Updated : 09 Aug, 2020 12:28 PM

 

Published : 09 Aug 2020 12:28 PM
Last Updated : 09 Aug 2020 12:28 PM

புதுச்சேரியில் ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 7 பேர் உயிரிழப்பு; புதிதாக 264 பேருக்குத் தொற்று உறுதி

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 264 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 4 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஆக.9) கூறும்போது, "புதுச்சேரில் 958 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 210 பேர், காரைக்காலில் 37 பேர், ஏனாமில் 17 பேர் என மொத்தம் 264 பேருக்கு (27.5 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 69 பேர் ஜிப்மரிலும், 37 பேர் காரைக்காலிலும், 17 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 78 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக காத்திருப்பில் உள்ளனர்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 4 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அரியாங்குப்பம் பாரதி நகர் குறிஞ்சி வீதியை சேர்ந்த 49 வயது ஆண் நபருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்தது. அவருக்குக் கடந்த 27 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஏற்கெனவே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 7 -ம் தேதி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டபோது உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவிந்தாசாலை பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்குக் கடந்த 25 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கதிர்காமம் அரசு மருத்துக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

உழவர்கரை சாலை வீதியை சேர்ந்த 58 வயது பெண் ஏற்கெனவே 2 ஆம் நிலை நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த 5 ஆம் தேதி கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தில் உள்ள பட்டினச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல், காரைக்கால் கிளிஞ்சல் மேடு சுனாமி நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டியும் தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

ஏனாம் டோபி வீதியை சேர்ந்த 38 வயது ஆண் நபர் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே காலில் தோல் நோய் பாதிப்பு இருந்தது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 5,382 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 332 பேரும், ஜிப்மரில் 384 பேரும், 'கோவிட் கேர் சென்ட'ரில் 346 பேரும், காரைக்காலில் 127 பேரும், ஏனாமில் 112 பேரும், மாஹேவில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 663 பேர், ஏனாமில் 49 பேர் என 712 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக காத்திருப்பில் உள்ள 78 பேரையும் சேர்த்து மொத்தமாக 2,094 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 10 பேர், ஜிப்மரில் 18 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 67 பேர், காரைக்காலில் 19 பேர், ஏனாமில் 16, மாஹேவில் ஒருவர் என மொத்தம் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குமடைந்தோர் எண்ணிக்கை 3,201 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் இருந்து 29 பேர் 'கோவிட் கேர் சென்ட'ருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை 46 ஆயிரத்து 878 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரத்து 575 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 428 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x