Published : 09 Aug 2020 08:09 AM
Last Updated : 09 Aug 2020 08:09 AM

பருவநிலை மாற்றத்தால் மண் ஈரப்பதம் குறைவு; சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகரிக்க வேண்டும்: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி யோசனை

சென்னை

பருவநிலை மாற்றத்தால் மண் ஈரப்பதம் குறைந்து வருவதால், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி டி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், ‘பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் பெற்றதாக தமிழ்நாடு’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

அதில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானி டி.ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் குறுநிலங்களில் விவசாயம் செய்துவரும் ஏழை விவசாயிகளே அதிகமாக உள்ளனர். பருவநிலை மாற்றத்தால் இவர்களின் பயிர் உற்பத்தி அளவு நிலையற்றதாக உள்ளது. அதனால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது.

வெப்பநிலை உயர்வு

தமிழகத்தில் 1900-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆய்வில், ஒவ்வொரு 10 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 0.12 டிகிரி செல்சியஸ் உயர்ந்து வருகிறது.

மழை அளவுகளை ஒப்பிடும்போது, வழக்கமான அளவே பெய்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் மண் ஈரப்பதம் குறைந்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் வெகுவாக மண் ஈரப்பதம் குறைந்துள்ளது.

இந்த ஈரப்பதக் குறைவை, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை குறைதல், வழக்கமான அளவு மழை கிடைத்தாலும் மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைவு, அதிக வெப்பம், பசுமை பரப்பின் அளவு போன்றவையும் தீர்மானிக்கின்றன.

இதனால் தமிழகத்தில் உற்பத்தி திறன் குறையக்கூடும். அதனால் மண் ஈரப்பதம் குறையும் பகுதிகளில் நெல், கரும்பு போன்றவற்றை பயிரிடுவதற்கு பதிலாக சிறுதானியப் பயிர்கள், மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிடும் பரப்பை அதிகரிப்பதன் மூலம், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x