

கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல், சுகாதாரத் துறையினருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு, 7-ம் கட்டமாக வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் நிலைமையை கருத்தில்கொண்டு அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இருப்பினும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப கட்டுப்பாடுகளைக் கூட்டவும், குறைக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை போல ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2-வது ஞாயிறான இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, பால் விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள் இயக்கம், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கம்ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மருத்துவ அவசரங்களுக்கு மட்டும் தனியார் வாகனங்கள் இயங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதர வாகனங்கள் இயக்கம், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் ஏற்கெனவே உத்தரவுகள் இருக்கும் நிலையில், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.