Published : 08 Aug 2020 06:36 PM
Last Updated : 08 Aug 2020 06:36 PM

பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனம்: ராமநாதபுரம் இளைஞரின் சாதனை

சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனம் நடத்தி சாதனை படைத்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பனிதவயல் கிராமத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் வீ.அன்பரசன் (23). இவர் நீட்ஸ் திட்டத்தின் கீழ் அரசு மானிய கடனுதவியில் பெற்று பிளாஸ்டிக் கழிவிலிருந்து சுற்றுப்புறத்திற்கு உகந்த திட எரிபொருள் (Solid Fuel) உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தனது நிறுவனம் குறித்து வீ. அன்பரசன் கூறியதாவது:

கடந்த 2018-ம் ஆண்டு பெட்ரோலியம் பொறியியல் பட்டப்படிப்பினை முடித்த உடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிக்கக்கூடிய திட்டம் குறித்தும், இதனை முழுமையாக செயல்படுத்த உதவிட வேண்டியும் மனு அளித்தேன்.

எனது திட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு சுகாதாரத்திற்கு உகந்த திட்டம் என சான்றளிக்கப்பட்டிருந்ததால் என்னை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து முதற்கட்டமாக ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.

மேலும் இது குறித்து சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் அரசு மானியத்துடன் ரு.13.75 லட்சம் மதிப்பில் கடனுதவியும் கிடைத்தது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக பரமக்குடி நகராட்சியிலிருந்து மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நிலக்கரி வடிவத்தில் திட எரிபொருளை தயாரிக்கின்றோம்.

இதனை தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் எரிபொருளாக பயன்படுத்தப் படுகிறது. இந்த எரிபொருள் நிலக்கரியை விட அதிக நேரம் நின்று எரியக்கூடியது. மேலும் சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் தடுக்கிறது.

தற்போது 26 டன் வரையிலும் ஆர்டர்கள் கிடைத்துள்ளது. ஆனால் கரோனா பரவல் நடவடிக்கைகள் காரணமாக உற்பத்தியை மிகக் குறைந்த அளவிலேயே செய்து வருகிறோம், என்றார்.

பிளாஸ்டிக்கை ஒழிப்பது மட்டுமின்றி, அதனை மாற்று எரிசக்தியாக உருவாக்கி இருக்கும் இளைஞர் வீ. அன்பரசனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் சனிக்கிழமை பனிதவயல் கிராமத்திற்கு நேரில் திட எரிபொருள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனத்தை ஆய்வு செய்து வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x