

மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உதவ தமிழகம் தயாராக உள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தாழ்வானப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக நிவாரண முகாமிற்கு வரவேண்டும். மழைக்காலமான தற்போது நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பது, குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நிலச்சரிவு பாதிப்புள்ள நீலகிரி கொடைக்கானல் ஆகிய மாவட்ட மக்களில் நீர் நிலைகளின் கரையோர மக்களுக்கு உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மூணாறு நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை விரைவில் மீட்க தமிழக முதல்வர் கேரளா முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள அரசிற்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். மூணாறு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பையும் உதவியும் வழங்க வருவாய்த்துறையும் பொதுத்துறையும் தயார் நிலையில் உள்ளது. நிலச்சரிவு மீட்புப் பணியினை தமிழக கண்காணித்து வருகிறது
கரோனோ பாதிப்பு காலத்தில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும், தொழில்துறை மேம்படுத்தவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கரோனோ சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ள நிலையில் ஏன் பொதுமக்கள் தனியார் மருத்துவமனையை நாட வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையோடு அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிரத்து பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.