Last Updated : 08 Aug, 2020 01:49 PM

 

Published : 08 Aug 2020 01:49 PM
Last Updated : 08 Aug 2020 01:49 PM

'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: வாகன பயிற்சிப் பள்ளிகள் செயல்பட 10-ம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

'இந்து தமிழ்' செய்தி எதிரொலியால் வாகன பயிற்சிப் பள்ளிகள் செயல்பட 10-ம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 2,000 வாகன பயிற்சிப் பள்ளிகள் அரசு அனுமதியோடு இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பயிற்சிப் பள்ளியிலும் பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் எனப் பலர் பணிபுரிந்து வருகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 40 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது.

ஊரடங்கு கால தடை உத்தரவில் பள்ளி, கல்லூரிகள் வரிசையில் வாகன பயிற்சிப் பள்ளிகளும் சேர்க்கப்பட்டதால் அவர்களால் இயங்க முடியவில்லை. தொடர்ந்து 4 மாதங்களாகப் பயிற்சி அளிக்காமலும், பயிற்சிப் பள்ளிகளைத் திறக்காமலும் இருந்ததால் வருவாய் இழந்து தவித்து வந்தனர்.

இது தொடர்பாக, கடந்த ஜூலை 27-ம் தேதி 'வாகன பயிற்சிப் பள்ளிகள் இயங்க தடை: வருவாய் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் குடும்பம்' என்ற தலைப்பில் 'இந்து தமிழ்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

அதில், "மாதம் ஒன்றுக்கு ஒரு கார் மூலம் அதிகபட்சம் 12 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறோம். அதுவும் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. வெவ்வேறு நேரங்களில்தான் பயிற்சி அளிக்கிறோம். ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே வாகன பயிற்சி அளிப்பதால் கூட்டம் சேர வாய்ப்பில்லை. அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறோம். எனவே, கட்டுப்பாடுகளோடு வாகன பயிற்சிப் பள்ளிகள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்" என வாகன பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

தமிழக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர், "அனுமதி கோரி வாகன பயிற்சிப் பள்ளிகள் சார்பில் அளிக்கப்பட்ட வேண்டுகோள் கடிதத்தை அரசின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளோம். தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வரும் 10-ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதல்வர் கே.பழனிசாமி இன்று (ஆக.8) அறிவித்துள்ளார்.

உரிமையாளர்கள் நன்றி

இதுகுறித்து தமிழ்நாடு இலகுரக மற்றும் கனரக பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சி.வி.சுந்தரேஸ்வரன் கூறும்போது, "அனுமதி அளித்துள்ள தமிழக முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர், போக்குவரத்து ஆணையர் ஆகியோருக்கு எங்கள் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசு அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்படுவோம். செய்தி வெளியிட்ட 'இந்து தமிழ்' நாளிதழுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x