

சென்னையில் வருமானவரித் துறை உளவுப் பிரிவு அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம், லேக் ஏரியா 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி ஒன்றில் வசித்து வந்தவர் மணிகண்ணன் (54). இவர் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள வருமானவரித் துறை அலுவல கத்தில் (சரக்குகள் சேவை வரி) சீனியர் நுண்ணறிவு (உளவு) பிரிவு அதிகாரியாக பணி செய்து வந்துள்ளார். இவரது மனைவி கலா. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்
துறை அலுவலகத்தில் பணி செய்து வருகிறார்.
கரோனா தொற்று?
இந்நிலையில், மணிகண்ணனுக்கு கடந்த மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அதே பகுதி 5-வது தெருவில் உள்ள தனது மற்றொரு சொந்த வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் சடலமாக தூக்கில் தொங்கிஉள்ளார். தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீஸார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இறப்புக்கு யாரும் காரணம் இல்லை
இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கூறும்போது, ‘தனக்கு வாழ பிடிக்கவில்லை. என் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என மணிகண்ணன் கடிதம் எழுதி கையெழுத்திட்ட தாளை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.