Last Updated : 07 Aug, 2020 07:28 PM

 

Published : 07 Aug 2020 07:28 PM
Last Updated : 07 Aug 2020 07:28 PM

அங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை- கைதானவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க திட்டம்

மதுரை  

அங்கொட லக்கா விவகாரம் தொடர்பாக மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

இலங்கையைச் சேர்ந்தவர் பிரபல போதைப்பொருள் கடத்தக்காரர் அங்கொட லக்கா (35). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இலங்கை போலீஸாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இலங்கை போலீஸ் பிடியில் தப்பிக்க, தமிழகத்துக்கு தப்பிய அங்கொட லக்கா கோவை பீளமேடு பகுதியில் பிரதீப்சிங் என்ற பெயரில் பதுங்கி இருந்தார்.

ஜூலை 3-ம் தேதி அவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின், அவரது உடல் மதுரைக்கு கொண்டு வந்து தத்தநேரி மின் மயமானத்தில் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையில், அவர் போலி ஆவணங்களின் அடிப்படையில் கோவையில் தங்கியிருந்தது தெரிந்தது.

இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த அவரது காதலி அமானி தான்ஜி (26), மதுரை ஆனையூர் பகுதியில் வசித்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, ஈரோடு தியானேசுவரன் ஆகியோரை கோவை போலீஸார் கைது செய்தனர். சிம்கார்டு, லேப்-டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மதுரையில் அங்கொட லக்காவுக்கு சிவகாமி சுந்தரி, அவரது பெற்றோர் தினகரன் – பாண்டியம்மாள் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்ததும், இவர்கள் மூலமே அங்கொட லக்காவுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட போலி ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் ஏற்பாடு செய்த தகவலும் வெளியாகின.

இலங்கை - தமிழகம் இடையே சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் 7 தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டிஎஸ்பி முத்துசாமி தலைமையில் சிபிசிஐடி குழு மதுரையில் முகாமிட்டு விசாரிக்கின்றனர். மதுரை ஆனையூர் பகுதியில் ரயிலார் நகரிலுள்ள பூட்டியிருந்த சிவகாமி சுந்தரியின் வீடு, வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வங்கி புத்தகம், பாஸ்போர்ட், இலங்கை நாட்டு ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆண்டில் மட்டுமே சிவகாமி சுந்தரி ஆனையூர், ரயிலார் நகர் பகுதியில் 5 வீடுகளை வீடுகளை வாடகை பிடித்து தங்கியது தெரியவந்தது. இது குறித்து வீட்டு உரிமையாளர்கள் நாகராஜ், யோகேசுவரன் உட்பட 5 பேர் மற்றும் தினகரன், அவரது மனைவி பாண்டியம்மாள், இவர்களது மகன் அசோக்குமார், சிவகாமி சுந்தரியின் கணவர் பிரதாப் உள்ளிட்டோரிடம் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பி முத்துச்சாமி தலைமையிலான போலீஸார் இன்று விசாரித்தனர்.

சிபிசிஐடி போலீஸ் கூறுகையில், ‘‘ அங்கட லக்கா மதுரையில் எவ்வளவு நாள் தங்கினார். போலி ஆவணங்கள் மதுரையில் ஏன் தயாரிக்கப்பட்டது. அவரது உடல் மதுரையில் எதற்காக எரிக்கப்படவேண்டும். அவருக்காக பிரதீப்சிங் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்த நிலையில், பிரதீப்சிங் என்பவர் யார் என, பல்வேறு கோணத்தில் விசாரிக்கிறோம். இருப்பினும், அங்கட லக்கா உண்மையில் இறந்தாரா/ நாடகமா என்பதால் கைதான சிவகாமி சுந்தரி உள்ளிட்ட மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x