

தமிழகம், புதுச்சேரியில் அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்பு வழக்கறிஞர்கள் இன்று கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர் சத்தியசீலன் தலைமையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிரதான வாயில் முன்பு வழக்கறிஞர்களின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாண்டியராஜன், கிருஷ்ணன், வெங்கடேஷ், மனோகரன், கண்ணன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
பின்னர் சத்தியசீலன் கூறுகையில், "கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படுகின்றன.
அதன்படி சமூக இடைவெளியை பின்பற்றி நீதிமன்றங்களை நடத்த வேண்டும்.
நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண உதவி, எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.5 லட்சம் வங்கி கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது" என்றார்.