தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Updated on
2 min read

தென் மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து இன்றும், நாளையும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த வானிலை ஆய்வு மைய அறிக்கை:

“ தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலைசரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 8 அன்று அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா 36 செ.மீ, அவலாஞ்சி, கூடலூர் பஜார் தலா 35 செ.மீ., மேல்கூடலூர், பிறையார் எஸ்டேட் தலா 33 செ.மீ., சேருமுல்லை 32 செ.மீ., மேல் பவானி 26 செ.மீ.,எமரால்டு பந்தலூர், பார்வுட் எஸ்டேட் தலா 25 செ.மீ., நடுவட்டம் 22 செ.மீ., க்ளென் மோர்கன் 19 செ.மீ., எமரால்டு 9 செ.மீ, கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லார் 36 செ.மீ., சின்கோனா 29 செ.மீ., சோலையார் 24 செ.மீ., வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 23 செ.மீ., தேனி மாவட்டத்தில் பெரியார் 20 செ.மீ, தேக்கடி 16 செ.மீ., கூடலூர் 7 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவலோகம் 8 செ.மீ, கூடலூர் 7 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஆகஸ்டு 7 அன்று குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்டு 7 அன்று வடகிழக்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்டு 8 அன்று கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 8 அன்று தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்டு 7 முதல் ஆகஸ்ட் 11 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 8 இரவு 11-30 மணிவரை கடல் அலை 3.5 மீ முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in