Published : 07 Aug 2020 02:19 PM
Last Updated : 07 Aug 2020 02:19 PM

ஊரடங்கால் மூடப்பட்டுள்ள 6,664 கோயில் ஊழியர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்

சென்னை

கிராமப்புறங்களில் உள்ள சிறு கோயில்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள கோயில்களில் பணியாற்றும் 6,664 ஊழியர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கோயில்களை நம்பி வாழும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணிகள் உள்ளிட்டோருக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களைச் சேர்ந்த 12,041 ஊழியர்களுக்கு மார்ச் 15 முதல் மே மாதம் 15 வரையிலான இரண்டு மாத காலங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல மே 16 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கு தலா 1,500 ரூபாய் வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கிராமப்புறங்களில் உள்ள சிறு கோயில்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மூடப்பட்டுள்ள கோயில்களில் பணியாற்றி வரும் 6,664 ஊழியர்களுக்கு ஜூலை மாத நிவாரணமாக தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x