Published : 07 Aug 2020 01:24 PM
Last Updated : 07 Aug 2020 01:24 PM

தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவிகித ஒதுக்கீடு; உடனடியாக நடைமுறைகளைத் தொடங்குக: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக.7) வெளியிட்ட அறிக்கை:

"வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதில் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதுதான் இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம். இதன் மூலம் மாணவர்களின் இடைநிறுத்தல் பல மடங்கு குறைந்திருக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குகிற அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீதம் இடங்களைப் பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.

இதன்படி, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தரும்படி தமிழக அரசுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக 2014 முதல் 2019 வரை 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி, மொத்தமுள்ள இடங்களில் 70.31 சதவிகித இடங்கள்தான் நிரப்பப்பட்டுள்ளன. 30 சதவிகித இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில், கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகளுக்குத் தமிழக அரசு செலுத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு அந்தக் கட்டணத்தைச் செலுத்துவதில் காலம் தாழ்த்துவதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையைத் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உடனடியாகச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதம் ஆகி வருகிறது. அதேபோல், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் 2இல் தொடங்கி மே 29இல் முடிவடைந்து விடும்.

ஆனால், நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிற மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை.

ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இணைய வழி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான நிலை ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்குக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவிகித ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x