Published : 07 Aug 2020 06:05 AM
Last Updated : 07 Aug 2020 06:05 AM

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கும்; ரூ.304 கோடியில் 31 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்- 500 அவசர ஊர்திகள் வாங்க முடிவு

மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.304.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 31 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் / மதுரை

மதுரை மாவட்டத்தில் ரூ.304 கோடியில் தொடங்கப்பட உள்ள 31 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், புதிதாக 500 அவசர ஊர்திகள் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மதுரை, திண்டுக்கல் உட்பட தென்மாவட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், புதிய பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முதல்வர் பழனிசாமி நேற்று காலை திண்டுக்கல் வந்தார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனாதடுப்பு நடவடிக்கைகள், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வர் பேசும்போது, ‘‘மக்களைக் காப்பாற்றுவதுதான் அரசின் கடமை. இதன் அடிப்படையில்தான் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் நோய்த் தொற்றை தடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால்தான் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், விவசாயிகள், சுயஉதவிக் குழுவினர் ஆகியோருடன் முதல்வர் கலந்தாய்வு நடத்தினார். அப்போது அவர்களின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசகம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் முதன்மைச் செயலாளர் கே.கோபால், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், ஆட்சியர் மு.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இ-பாஸ் நடைமுறை

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்..

பாஜக தலைவர்களை திமுகஎம்எல்ஏ சந்திக்கச் சென்றது அவர்களது உட்கட்சி விவகாரம். நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்.

தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழுசெயல்பட்டு வந்தது. தற்போதுஇரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு இ-பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பினால்தான் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திண்டுக்கல் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் மதுரை வந்த முதல்வர், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், கரோனாமுன்களப் பணியாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்களுடன் கலந்தாலோசித்தார். இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்தநிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார். மேலும், ரூ.304.55 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

காய்ச்சல் முகாம்கள்

மதுரையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன. மதுரையில் எடுத்த தடுப்பு நடவடிக்கை காரணமாக, நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

அதற்கு காரணம், அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதுதான். மதுரை மாநகராட்சியில் 4 ஆயிரம் காய்ச்சல் முகாம்களும், புறநகர் கிராமங்களில் 8 ஆயிரம் முகாம்களும் நடத்தப்பட்டன. அதனால், தினமும் 400 ஆக இருந்த தொற்று பரவல் தற்போது 100 ஆக குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 84 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.

தென் தமிழகத்தின் தலைநகரமான மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது எல்லோருடைய கனவாக இருந்தது. தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே, மதுரையில் ரூ.150 கோடியில் அமைந்துள்ள சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புற்று நோயைக் கண்டறிய பெட் ஸ்கேன் வசதியும் உள்ளது.

ஜப்பான் ஜைக்கா நிறுவனம் உதவியுடன் ரூ.300 கோடியில் மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட உள்ளது. மதுரை அரசுமருத்துவக் கல்லூரியில் 150 என்ற அளவில் இருந்த எம்பிபிஎஸ் இடங்கள், தற்போது 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களால் மருத்துவத் துறையில் மதுரை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறது.

மதுரையில் இதுவரை 7 கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் குணமடைந்துள்ளனர். மேலும், கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும்.

500 அவசர ஊர்திகள்

தமிழகத்துக்கு விரைவில் 500 அவசர ஊர்திகள் வாங்க உள்ளோம். அதற்காக ரூ.103 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தால் கரோனா நோயாளிகள் ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் இந்திய மருத்துவத்துக்கு தமிழகத்தில் தனி அமைச்சகம் தேவையில்லை.

மதுரை நகர மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முல்லை பெரியாறு அணை கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. மதுரையில் 52 பெரும் தொழிற்சாலைகளும், 48 ஆயிரம் சிறுகுறு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு மானியம், சலுகைகள் வழங்க உள்ளோம்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x