பெண் தூய்மை பணியாளருக்கு கை துண்டாகி விபத்து; செயற்கை கை பொருத்த சிகிச்சை கிடைக்காத நிலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பெண் தூய்மை பணியாளருக்கு கை துண்டாகி விபத்து; செயற்கை கை பொருத்த சிகிச்சை கிடைக்காத நிலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

விபத்தில் சிக்கி கை துண்டான பெண் தூய்மை பணியாளருக்கு செயற்கை கை பொருத்த மாவட்ட நிர்வாகம் சிகிச்சைக்கு உதவாத நிலைகுறித்து பத்திரிகையில் வந்த செய்தி அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம் தஞ்சை நகராட்சி நிர்வாக ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரேவதி என்பவர் 4 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் கரோனா தடுப்பு பணியிலும் ஈடுப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 18 ம் தேதி நுண் உரம் செயலாக்க மையத்தில் பணியாற்றும் போது இயந்திரத்தில் அவரின் வலது கை சிக்கி துண்டானது.

இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செயற்கை கை பொருத்தலாம் என தெரிவித்தனர். இதுதொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மகள் திவ்யா மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனியார் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து (SUO-MOTO) விசாரணைக்கு எடுத்தது.

வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், தூய்மைப் பணியாளருக்கு உரிய மருத்து சிகிச்சை வழங்காதது குறித்து நகராட்சி நிர்வாக துறை ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in