Published : 06 Aug 2020 05:52 PM
Last Updated : 06 Aug 2020 05:52 PM

திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஜாமீன்: ரூ.3 லட்சத்தை அடையாறு புற்று நோய் மையத்துக்கு செலுத்த உயர் நீதிமன்றம்  உத்தரவு

துப்பாக்கி சூடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் அடையாறு புற்று நோய் மையத்துக்கு ரூ.3 லட்சத்தை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். நிலப்பிரச்சினை தகராறில் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் கடந்த மாதம் நடந்த மோதலில் இவருடைய தந்தை லட்சுமிபதி மீது தாக்குதல் நடந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ இதயவர்மன் உள்பட 11 பேர், ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது,
அப்போது இதயவர்மன் தரப்பில், “இதயவர்மன் தந்தை லட்சுமிபதியை எதிர்தரப்பினர் அரிவாளால் வெட்டி தாக்கியதால் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி அளித்த புகாரின்படி கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சீனிவாசன் என்பவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதயவர்மன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கின் விசாரணை முடிவடையவில்லை என்றும் தீவிரவாத தொடர்புகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காயமடைந்தவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதையும், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, இதயவர்மன் உள்பட 11 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதேதொகைக்கான இருநபர் பிணையும் செலுத்தக் கூறி, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

எம்எல்ஏ இதயவர்மன், 3 லட்சம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வழங்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இதயவர்மன், வேலூரில் தங்கியிருந்து, நகர காவல் நிலையத்தில் காலை, மாலை இருவேளை கையெழுத்திட வேண்டும் எனவும், மற்ற 10 பேரும் திருப்போரூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x