Published : 06 Aug 2020 04:09 PM
Last Updated : 06 Aug 2020 04:09 PM

இ-பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

இ-பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் தீர்த்து வைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், பின்னர் ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

“உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்ததன் காணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கரோனா வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியிருக்கிறது.

இது ஒரு புதிய நோய். உலகத்தில் சுமார் 210 நாடுகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இந்தியாவில் தமிழகத்திலும் இந்த கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் பரவியுள்ளதை கட்டுப்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக் கூடிய தொற்று நோய் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இதனைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் மற்றும் நம்முடைய மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின்படி நம்முடைய மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அதனால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை பார்க்கிறோம்.

அதேபோல, இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் சதவீதம் குறைந்திருக்கிறது. குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க, முழுக்க பொதுமக்களுடைய ஒத்துழைப்பினால் தான் இந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடித்தால் இந்த நோய்ப் பரவலை படிப்படியாக குறைக்க முடியும், இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த நோய்த் தொற்றின் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், விரைவில் குணமடைந்து வீடு திரும்பலாம்.

தமிழகத்தில் இந்த நோய்ப் பரவல் ஏற்பட்டவுடன், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அரிசி பெறுகின்ற ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டது. விலையில்லா அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு ஆகியவை தொடர்ந்து மூன்று மாத காலம் வழங்கப்பட்டன. இப்பொழுது மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து தொடர்ந்து நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அவர்களுக்கும் விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவுடன், அரசே அதன்முழு செலவையும் ஏற்றுக் கொண்டு ரயில் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் எந்த விதத்திலும் மக்கள் பாதிக்கக்கூடாது என்று அரசு கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அம்மா உணவகத்தில் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வந்தது. சமூகக் கிச்சன் மூலமாக கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலே அரசின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது, அதற்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கும் அரசு உத்தரவு வழங்கியிருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்ததன் மூலம் மக்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதற்குத் தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது, நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல, மருத்துவர்களுக்குத் தேவையான உபகரணங்களான என்-95 முகக்கவசம், பாதுகாப்பு உடை மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன,

போதிய கையிருப்பும் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நம் மாநிலத்தில் தான் அதிக அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. சுகூஞஊசு முவைள தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்ல எவ்விதத் தடையும் இல்லாமல் வேளாண் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு சரியான முறையில் பருவமழை பெய்த காரணத்தால், நல்ல விளைச்சலை நாம் கண்டிருக்கிறோம்.

அதேபோல, கடந்த ஆண்டு அமெரிக்கன் படைப்புழுவால் மக்காச்சோளப் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அமெரிக்கன் படைப்புழுவை அகற்றுவதற்காக மருந்து தெளிப்பதற்காகும் முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இ-பாஸ் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு தெளிவான உத்தரவை அரசு வழங்கியுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைவருடைய பெயரையும், முகவரியையும் எழுதிக் கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை கொடுப்பார்கள், அதை காண்பித்து நீங்கள் தொழிற்சாலைகளுக்கு வரலாம். மாதம் ஒருமுறை அதை புதுப்பித்தால் போதும்.

சிறு தொழில் புரிபவர்களுக்கும் அதேபோலத்தான். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்கள் குறித்த விவரங்களை அளித்தால், மாவட்ட ஆட்சித்தலைவர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார். மேலும், அவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்து, positive என்றால், அரசால் சிகிச்சை அளிக்கப்படும், negative என்றால், நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பணி வழங்கலாம்.

அதேபோல, இன்னும் பல்வேறு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள், அரசு உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x