Published : 06 Aug 2020 01:24 PM
Last Updated : 06 Aug 2020 01:24 PM

பெய்ரூட் வெடிவிபத்து; சென்னையில் அச்சுறுத்தலாக இருக்கும்  740 டன் அமோனியம் நைட்ரேட்: உடனடியாக அகற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 நாட்களுக்கு முன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள் சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து அந்நாட்டில் மிகப்பெரும் சேதத்தை விளைவித்த நிலையில் சென்னையில் 5 ஆண்டுகளாக இதேப்போன்று 740 டன் அம்மோனியம் நைட்ரேட் உள்ளதை அகற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

2 நாட்களுக்கு முன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிமருந்து சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் அந்நகரம் மட்டுமல்லாது லெபனானின் ஒட்டுமொத்த சேமிப்பே 70 சதவீதம் சேதமடைந்ததாக தகவல் வெளியானது. பெரும் வெடிப்புக்கு காரணம் அங்குள்ள வெடிமருந்து சேமிப்புக்கிடங்கில் சேமித்து வைத்திருந்த அமோனியம் நைட்ரேட் எனும் வெடிபொருள் காரணமாக அமைந்தது.

இதேப்போன்ற 2015-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் மூலமாக அமோனியம் நைட்ரேட் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்டபோது சுமார் 740 டன் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதை அப்புறப்படுத்தி வேறு வகையில் உரமாக பயன்படுத்தவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

“சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்.


சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

— Dr S RAMADOSS (@drramadoss) August 6, 2020

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x