Published : 06 Aug 2020 08:14 AM
Last Updated : 06 Aug 2020 08:14 AM

முதல்வர் நாளை நெல்லை வருகை: கரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள சுலோச்சன முதலியார் பாலத்துக்கு அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம். இதனை முதல்வர் பழனிசாமி நாளை திறந்துவைக்கிறார். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சிப்பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி நாளை திருநெல்வேலி வருகிறார்.

மதுரையிலிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு நாளை காலை 9.30 மணிக்கு வரும் அவருக்கு, மாவட்ட எல்லையில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பாலத்தை அப்போது முதல்வர் திறந்து வைக்கிறார்.

பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, விவசாயிகள், தொழில் முனைவோர், சுயஉதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடுகிறார். வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில், அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து பேசுகிறார்.

முதல்வர் வருகையையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x