Published : 05 Aug 2020 06:40 PM
Last Updated : 05 Aug 2020 06:40 PM

திராவிடர் கழகத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை

திராவிடர் கழகத்தை ஜனநாயகத்துக்கு எதிரான அமைப்பு என அறிவித்து தடை விதிக்கக்கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பழனியைச் சேர்ந்த கனகராஜ் உயர் நீதிமன்றg கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:

தமிழ்g கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் சில நாட்களுக்கு முன்பு வீடியோக்கள் பதிவிடப்பட்டன.

சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி வீடியோக்களைப் பதிவிட எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. கறுப்பர் கூட்டம் திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டுள்ளது.

இது போன்ற பிரிவுகளைப் பயன்படுத்தி திராவிடர் கழகம் இந்து மக்களையும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் புண்படுத்தி வருகிறது. இந்து மதத்தை பின்பற்றுபவர்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் திராவிடர் கழகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும் திராவிடர் கழகம் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே திராவிடர் கழகத்தை ஜனநாயகத்துக்கு எதிரான அமைப்பு என அறிவித்து, அதன் உடமைகளை பறிமுதல் செய்யவும், அதன் பொதுச் செயலர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எதன் அடிப்படையில் திராவிடர் கழகம் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கூறுகிறீர்கள்? என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர், இந்து மதத்தை பின்பற்றுவோரை புண்படுத்தும் விதமாக திராவிடர் கழகத்தினர் நடந்து கொள்கின்றனர் என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 51உட்பிரிவு- ‘ஏ’-க்கு எதிராக திராவிடர் கழகம் செயல்படுகிறது என்பதற்கு என்ன ஆதாரம்? என்றனர்.

இதற்கு மனுதாரர் தரப்பு பதிலளிக்கவில்லை. அரசு தரப்பில் மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக அரசுக்கு எந்த மனுவும் அனுப்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், மனுதாரர் சட்ட அடிப்படையில் வாதங்களை முன்வைக்க தயாராகவில்லை. விளம்பர நோக்கத்திற்காகவே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று கூறி விசாரணையை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x