Last Updated : 05 Aug, 2020 06:48 PM

 

Published : 05 Aug 2020 06:48 PM
Last Updated : 05 Aug 2020 06:48 PM

பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜுக்குக் கரோனா  

பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலையில் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் மூன்றாவது மக்கள் பிரதிநிதி இவராவார். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் கரோனா தொற்று ஏற்பட்ட மூன்றாவது நபர் பவுன்ராஜ் ஆவார்.

கடந்த மாதம் 30-ம் தேதியன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தைப் பிரித்துத் தனி மாவட்டமாக உருவாக்குவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அவர்களில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முதலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அடுத்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தானாக முன்வந்து செய்து பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அதனையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதா மற்றும் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனையடுத்து அவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் வே.பாரதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நாங்கள் மூன்று பேரும் ( சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர்கள்) பரிசோதனை செய்து கொண்டோம்.

மயிலாடுதுறை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மருத்துவமனையிலும், நானும், பூம்புகார் உறுப்பினர் பவுன்ராஜும் சென்னையில் பரிசோதனை செய்து கொண்டோம். அதில் பவுன்ராஜுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். நலமுடன் இருக்கிறார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x