

இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கைக் கைவிட வேண்டும் எனவும், பொதுப் போக்குவரத்தைப் படிப்படியாகத் தொடங்க வேண்டும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.5) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:
"1. இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்குச் சென்ற வியாபாரிகள், தினக்கூலி உழைப்பாளிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
அதேபோல், சொந்த ஊர்களில் உள்ள வயதான, சிகிச்சை பெறும் பெற்றோரை, அவ்வப்போது சென்று கவனிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இறுதிச் சடங்குகளுக்குச் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றால், இறப்புச் சான்று கட்டாயம் என்று உள்ளது. துக்க வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக இறப்புச் சான்று பெற்று அனுப்பி வைக்க இயலாது. இதனால் பலர் துக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய, நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய காரணங்களுக்காகப் பயணிக்க இ-பாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர். மேலும், ஒருமுறை ஒரு செல்போன் எண்ணைப் பதிவிட்டு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பிறகு அந்த எண்ணைக் கொண்டு, சரியான ஆவணங்களுடன் எத்தனை முறை விண்ணப்பித்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது எனச் செய்திகள் வருகின்றன.
அதேநேரத்தில், செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஆவணம் இல்லாவிட்டாலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்கள் நியாயமான காரணங்களுக்கு ஆவணத்துடன் விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் ஊழல் - முறைகேடுகள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் தேவையான மாற்று வழிகளையும் கையாள வேண்டுமெனவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
2. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கைக் கைவிட வேண்டும்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற நிலையால், சனிக்கிழமைகளில் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்குவதற்குக் கடைகளில் குவிகின்றனர். மக்கள் கூட்டமாகக் கூடும்போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கரோனா தொற்று தடுப்பு விதிகளைப் பின்பற்றாமலும் இருப்பதால் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்களிடம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும், அனைவரும் முகக் கவசம் அணியவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கைத் தளர்த்த வேண்டுமெனவும் பிற நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விதிகளையே ஞாயிற்றுக் கிழமையும் அமலாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
3. நிபந்தனைகளுடன் பொதுப் போக்குவரத்தைப் படிப்படியாகத் தொடங்கிட வேண்டும்
கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தினக்கூலித் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும், சாதாரண ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் தங்களது அவசியத் தேவைகளுக்காக நகரங்களுக்கோ அல்லது வெளியூர் செல்வதற்கோ பொதுப் போக்குவரத்து இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சொந்தமாக இருசக்கர வாகனம் இல்லாத பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர்.
அதேபோல், தற்போது மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பொதுப் போக்குவரத்து இல்லாமல் அதிக கட்டணத்திற்கு தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிறு வியாபாரிகள், வணிகர்கள் நகரங்களுக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாத நிலையும், விவசாயிகள் விவசாயப் பொருட்களை நகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்க முடியாத நிலையும் உள்ளது.
எனவே, கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதுடன், சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு சில நிபந்தனைகளுக்குட்பட்டு படிப்படியாக பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.