தமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடல் நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் மாளிகை உள்ளது. பல நூறு ஏக்கர் கொண்ட இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர்.

சமீபத்தில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் சுமார் 185 பேருக்கு அடுத்தடுத்து கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மொத்தமாக 87 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, மருத்துவர் ஆலோசனையின்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (ஆக.5) காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தொடர்ந்து எவ்வித அறிகுறியும் இல்லை எனவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in