ஓசூர் வனச்சரக கிராமங்களில் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு: மாவட்ட வனத்துறை நடவடிக்கை

அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகப் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட 10 நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஓசூர் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளர் பிரபு மற்றும் பலர்.
அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகப் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட 10 நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஓசூர் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளர் பிரபு மற்றும் பலர்.
Updated on
1 min read

ஓசூர் மாவட்ட வனத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகங்களில் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகளை, கிராம மக்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட வனச்சரகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் சிலர் உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதும் அதன் மூலமாக வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகவும், மாவட்ட வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் ஓசூர் வனக்கோட்டம் வன உயிரினக் காப்பாளர் பிரபு உத்தரவின் பேரில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கிராம மக்களில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்படி ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வனத்துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரண்ணன்தொட்டி, உரிகம், பிலிக்கல் மற்றும் பீர்ணப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர் தங்களிடம் இருந்த உரிமம் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகளைத் தாமாக முன்வந்து வனத்துறை மற்றும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வின் போது ஓசூர் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளர் பிரபு, அஞ்செட்டி வனச்சரகர் ரவி, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் கவுன்சிலர் பழனி, உரிகம் ஊராட்சி மன்றத் தலைவர் மாதேவய்யா, காவல்துறை அதிகாரிகள் மற்றும் கிராமப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

வனச்சரகப் பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் மூலம் வன உயிரினங்கள் வேட்டையாடுவதைத் தடுக்க வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்ப்பு பணிக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஓசூர் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளர் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in