கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கு: நாமக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: கோப்புப்படம்
Updated on
1 min read

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் கோரிய வழக்கில் நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரகு மற்றும் ரஞ்சித் ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். மதுரை நீதித்துறை நடுவர் எண் மூன்றுக்கு வழக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக விண்ணப்பித்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனர். இருவரும் உடல்நலக் குறைவால், சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை இன்று (ஆக.5) விசாரித்த நீதிபதி தாரணி, இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in