தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் இணைய சேவை: உயர் கோபுரம் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு - பராமரிப்பு குறைபாடே விபத்துக்கு காரணம் என போலீஸார் குற்றச்சாட்டு

திருப்பூர் - பல்லடம் சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்
திருப்பூர் - பல்லடம் சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்
Updated on
1 min read

பிரபல தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தின் இணைய சேவை உயர் கோபுரம் சாய்ந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் மாநகர் பல்லடம் சாலையில், தமிழ்நாடு திரையரங்கு அருகே பிரபல தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் ஷோரும்செயல்படுகிறது. அதன் முகப்பு பகுதியில் கட்டிட உரிமை யாளருக்கு சொந்தமான இடத்தில், அந்நிறுவன அலுவலக மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக 80 அடி உயரத்தில் இணைய சேவை உயர் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி இருந்த மேற்கூறப்பட்ட இணைய சேவை உயர் கோபுரம், திருப்பூர் மாநகரில் நேற்று காலை முதல் வீசிய பலத்த காற்றில், பல்லடம் சாலையில் அடியோடு சாய்ந்து விழுந்தது. அப்போது திருப்பூர் நோக்கி வந்த லாரி, உயர் கோபுரம் சாய்ந்து விழுவதை பார்த்து நிறுத்தப்பட்டுள்ளது. இதை அறியாத இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், லாரியை முந்தி செல்ல முற்பட்டுள்ளார். லாரி மீது விழுந்த உயர் கோபுரத்தின் தலைப் பகுதி, இருசக்கர வாகன ஓட்டியின் தலையிலும் பலமாக விழுந்தது. தலைக்கவசம் அணிந்திருந்த நிலையிலும், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வீரபாண்டி போலீஸார் சென்று, உயர் கோபுரத்தை அப்புறப்படுத்தினர். சடலத்தை மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், திருப்பூர் கொங்கு நகர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த செங்கிஸ்கான் (54) உயிரிழந்திருப்பதும், பின்னலாடை நிறுவன தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'சம்பந்தப்பட்ட உயர் கோபுரத்தை பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் மீது புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்துவிசாரித்து வருகிறோம்' என்றனர்.

ஆட்சியர் ஆய்வு

முன்னதாக, சம்பவ இடத்தை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன மழையின்போது, தனியார் அலைபேசி தொலைத் தொடர்பு நிறுவன கோபுரம் பல்லடம் சாலையில் சாய்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in