Published : 04 Aug 2020 10:13 PM
Last Updated : 04 Aug 2020 10:13 PM

யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு

பூரண சுந்தரியைப் போல வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வில் வலிமை பெறும் திறனை இளைய தலைமுறையினர் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் என யூபிஎஸ்சி தேர்வில் வென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தமிழகத்திலிருந்து 44 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் கன்னியாகுமரி மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி பூரண சுந்தரி வென்றுள்ளதுதான். அவருக்குப் பாராட்டு மழை குவிகிறது. இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ட்விட்டர் பதிவு:

“கோவை அம்மா #IAS அகாடமியில் பயிற்சி பெற்று #UPSC தேர்வில் இந்திய அளவில் 286-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ள மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூரண சுந்தரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பூரண சுந்தரியைப் போல, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வாழ்வில் வலிமை பெற்று, சமூகத்தில் மாற்றங்கள் புரியும் திறனாளிகளை இளைய தலைமுறையினர் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்.

உங்களின் அனைத்துக் கடின முயற்சிகளுக்கும் அம்மா ஐஏஎஸ் அகாடமி என்றும் உறுதுணையாக நிற்கும்”.


இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x