Last Updated : 04 Aug, 2020 06:28 PM

 

Published : 04 Aug 2020 06:28 PM
Last Updated : 04 Aug 2020 06:28 PM

முகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?- மதுரை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மக்கள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் கரோனா பரவி வரும் சூழ்நிலையில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், மதுரை மாவட்டத்தில் 1400 பேர் வீடுவீடாகச் சென்று கரோனா சோதனை செய்து வருகின்றனர். மதுரை நகர் பகுதியில் 350 காய்ச்சல் முகாம்களும், மாவட்டம் முழுவதும் 7666 காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் 3,16,681 பேர் பங்கேற்றனர். இவர்களில் 34,086 பேருக்கு ஸ்வாப் சோதனை செய்யப்பட்டது. கரோனா பரிசோதனை முடிவுகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், கரோனா சோதனை முடிவுகளை வெளியிட தாமதமாவது ஏன்? 7 நாட்களுக்கு பிறகும் முடிவு வராவிட்டால் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு செய்யலாமா? கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமானால் நம்பிக்கை குறையும், தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர். எனவே சோதனை முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி திமுக எம்எல்ஏ சரவணன் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.

அவர் வாதிடுகையில் கரோனா சிகிச்சை அளிப்பவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம், கவச உடை ஆகியன வெள்ளக்கல்லில் பொது வெளியில் போட்டு எரிக்கப்படுகின்றன. கரோனா காற்றிலும் பரவ வாய்ப்புள்ள என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா கழிவுகள் பொது வெளியில் எரியூட்டுவது ஆபத்தை ஏற்படுத்தும்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி 9 முதல் 12 மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். கரோனா கழிவுகள் பொதுவெளியில் எரியூட்டப்படுவதால் அவனியாபுரம் பகுதியில் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான போதுமான விதிகள் இருக்கையில் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்? தற்போது வரை பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறைகளை அகற்ற எந்தத் திட்டமும் இல்லை என்பது தெரிகிறது. கரோனோ தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் சூழலில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள், கையுறைகளை முறையாக அகற்றுவது அவசியம் என்றனர்.

தொடர்ந்து கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளதா? பயன்படுத்தப்பட்ட முக கவசம், கையுறைகளை அழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பது தொடர்பாக தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x