Published : 04 Aug 2020 02:16 PM
Last Updated : 04 Aug 2020 02:16 PM

பட்டியலின மாணவர்கள் கல்வி உதவித்தொகை; நிலுவையில் உள்ளதை வழங்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

பட்டியலின மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில ஆதி திராவிடர் நலத்துறை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்ணங்களையும் அரசே செலுத்துகிறது.

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு முதல் அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலுத்தவில்லை. தற்போது வரை பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

எனவே நிலுவைத் தொகையை உடனடியாக அந்தந்தக் கல்லூரிகளுக்குத் தர உத்தரவிட வேண்டும், அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, வழக்கு குறித்து நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x