வீட்டு வாடகை வசூலிக்கத் தடைகோரும் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

வீட்டு வாடகை வசூலிக்கத் தடைகோரும் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

கரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்கத் தடைவிதிக்க அரசாணை பிறப்பிக்கக் கோரிய வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றார். இதனையடுத்து அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அவரது மனுவில், “கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, குடியிருப்பு வாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மார்ச் 29-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய்த் தடுப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது. இப்போது, ஊரடங்கு காலம் 60 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீடு, நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார்.

இதேபோல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ வீட்டு உரிமையாளரோ யாரும் வழக்குத் தொடரவில்லை என்றும் நீதிபதிகள் நேற்று சுட்டிக்காட்டினர். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரரிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால், வழக்கு நாளை (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in