

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள 124 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 8,884 பேருக்கு இலவச புத்தகங்கள், புத்தகப் பை, நோட்டுகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன.
படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை வகித்தார். மாணவ மாணவியருக்கு இலவச புத்தங்களை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கி.சீனிவாசன், கோ.விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், கரோனா தொற்று ஊரடங்கால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்படைக்கூடாது என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
2-ம் வகுப்பு முதல் மாணவ மாணவியருக்கு தொலைக்காட்சிகள் வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறன. இதனை மாணவர்கள் கண்டு பயனடையும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் 80 அரசு மற்றும் 44 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8,884 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு இலவச புத்தகங்கள், புத்தகப் பை, காலணி மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.