போதைப் பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தொடர்பு: கோவையில் உயிரிழந்த இலங்கை இளைஞர்- சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

போதைப் பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தொடர்பு: கோவையில் உயிரிழந்த இலங்கை இளைஞர்- சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
Updated on
2 min read

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை இளைஞர் கோவையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் மதுமாசந்தான லசந்தா பெரேரா (எ) அங்கட லக்கா(35). போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரை, இலங்கை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்தியாவுக்கு தப்பிவந்த இவர் கோவை பீளமேட்டில் பிரதீப் சிங் என்ற பெயரில் பதுங்கியிருந்தார். கடந்த ஜூலை 3-ம் தேதி இவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டை பெற்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது காதலி அமானி தான்ஜி(27), மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமிசுந்தரி(36), ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப், வெளிநாட்டு கரன்சிகள், போலி ஆதார் கார்டு நகல், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

நிழல் உலக தாதா

இதுகுறித்து கோவை மாநகர போலீஸார் கூறியதாவது: கைதான சிவகாமிசுந்தரியின் தந்தை, விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். அவரின் மூலம் அங்கடா லக்காவுக்கு இந்தியாவில் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் நிழல் உலக தாதா வாக வலம் வந்த அங்கட லக்காவின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏராளமான எதிரிகளும் இருந்துள்ளனர். இதனால், கடந்த 2018-ல் மதுரை வந்த அங்கட லக்கா, சிவகாமிசுந்தரியின் வீட்டில் 3 மாதங்கள் தங்கிவிட்டு, பின்னர் கோவை சரவணம்பட்டியில் குடியேறினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பீளமேடு சேரன் மாநகரில் குடியேறிய அங்கட லக்கா, உடற்பயிற்சிக் கூடங்களுக்கு புரோட்டீன் பவுடர் விநியோகிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமானி தான்ஜியும் கோவை வந்து, அங்கட லக்காவுடன் தங்கியுள்ளார். அங்கட லக்கா வைத்திருந்த ஆதார் அட்டை, மேற்குவங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தியானேஸ்வரன் உதவியுள்ளார்." என்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் நேற்று கோவை வந்து, சிபிசிஐடி போலீஸாருடன் ஆலோசனை நடத்தினார்.

கோவையில் உயிரிழந்த அங்கட லக்காவின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், அவரது மரணம் இயற்கையானது என சான்றளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உடல் தகனம்?

இந்நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் 2 தினங்களுக்கு முன் மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிகிறது. 'விஷம் கொடுத்து அவரை கொலை செய்திருக்கலாம், அவரது இறப்பு இயற்கையானது என சான்றளிக்கப்பட்டது எப்படி' என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மற்றொருவர் உடலைக் காட்டி, அவர்தான் அங்கட லக்கா என நாடகம் ஆடுகின்றனரோ எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை க்யூ பிரிவு போலீஸார் கூறும்போது, "நாங்கள் விசாரித்தவரை, மதுரையில் அங்கடா லக்காவின் உடல் தகனம் செய்யப்படவில்லை" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in