Published : 04 Aug 2020 07:17 AM
Last Updated : 04 Aug 2020 07:17 AM
கரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் பணியை மின்வாரியம் மீண்டும் தொடங்கி உள்ளது.
தற்போது வீடுகள் மற்றும் கடைகளில் மின்வாரியம் பொருத்தியுள்ள ‘ஸ்டேடிக் மீட்டர்’களில் மின்பயன்பாட்டை ஊழியர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஆளில்லாமல் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் ‘ஸ்மார்ட் மீட்டரை’ பொருத்துமாறு அனைத்து மாநில மின்வாரியங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நவீன மீட்டர் தொலைத்தொடர்பு வசதி மூலம், மின்வாரிய அலுவலக சர்வருடன் இணைக்கப்படும். இதனால், மின்பயன்பாடு கணக்கு எடுக்கும் தேதி வந்ததும், தானாகவே மீட்டர் பயன்பாட்டைக் கணக்கெடுத்து, குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும்.
முதல்வர் அறிவிப்பு
அதன்படி ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் சென்னையில் ரூ.4 ஆயிரத்து 300 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்தார்.
இத்திட்டம் குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் பணி சோதனை ரீதியாக சென்னை தி.நகரில் தொடங்கப்பட்டது. அதற்குள் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணி மீண்டும் தொடங்கி உள்ளது. இதன் செயல்பாட்டைப் பொறுத்து மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்’’ என்றனர்.
கணக்கீட்டு கருவி வாங்க திட்டம்
இதற்கிடையே மின் கணக்கீடு செய்வதற்காக தற்போது பயன்பாட்டில் உள்ள கையடக்கக் கருவிகள், மின் கணக்கீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், அவற்றில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால், மின்பயன்பாட்டை துல்லியமாகக் கணக்கெடுக்க முடிவதில்லை.
இதையடுத்து, புதிய கருவிகளை வாங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இக்கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளகருவிகளைவிட எடை குறைவாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் இடம் பெற்றிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT