Last Updated : 03 Aug, 2020 08:13 PM

 

Published : 03 Aug 2020 08:13 PM
Last Updated : 03 Aug 2020 08:13 PM

தூத்துக்குடியில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் அமெரிக்க ஆயுதக் கப்பல்; விற்க அனுமது கோரும் துறைமுகக் கழகம்- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி துறைமுகத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா ஆயுதக் கப்பலை விற்க அனுமதி கோரி கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி தூத்துக்குடி துறைமுக கழகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம் சார்பில் அதுன் கடற்பிரிவு துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின்குமார்சிங், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த எம்.வி.சீமென் கார்டு ஒஹியோ என்ற கப்பலை தருவைகுளம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து கப்பலில் இருந்த 35 பேர் உட்பட 43 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் கப்பலில் இருந்த 35 பேர் உட்பட அனைவருக்கும் தண்டனை வழங்கி 11.1.2016-ல் உத்தரவிட்டது.

வழக்கின் முதல் இரு குற்றவாளியான வாசிங்டன் அட்வான் போர்ட் கம்பெனி ஐஎன்சி நிர்வாகி மற்றும் அந்த கம்பெனியின் செயலாக்க இயக்குனர் முகமது பிரஜூல்லா ஆகியோர் தலைமறைவானதால் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 35 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீடு மனு ஏற்கப்பட்டு அனைவரையும் உயர் நீதிமன்ற கிளை 27.11.2017ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் பிளாட்பாரத்தில் 12.3.2013 முதல் 6 ஆண்டு 9 மாதமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 31.12.2019 வரை அமெரிக்க நிறுவனம் ரூ.2,91,13,634 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளது.
இந்த கட்டணத்தை கேட்டு அமெரிக்க கப்பல் நிறுவனத்துக்கு துறைமுக கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் திரும்ப வந்துவிட்டது. கப்பலுக்கு உரிமை கோரும் கப்பல் நிறுவனம் சார்பில் எங்கும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சேதமடைந்து வருகிறது. கடல் நீர் கப்பலுக்குள் புகும் அபாயம் உள்ளது. கடல் நீர் கப்பலுக்குள் சென்றால் கப்பலை திரும்ப பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். கடலுக்குள் மூழ்கிவிடவும் வாய்ப்புள்ளது.

இதனால் கப்பலை விற்க அனுமதி கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். ஆனால் மேல்முறையீடு மனு நிலுவையில் இருப்பதாக கூறி எங்கள் கோரிக்கையை ஏற்க தூத்துக்குடி நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே அமெரிக்க கப்பலை விற்க அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் முடிவெடுக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. துறைமுக கழகம் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த அட்வான் போர்ட் கம்பெனி, அதன் செயலாக்க இயக்குனர், ஓமன் பியூட்சர் டவர் இந்தியா எல்எல்சி நிறுவனம் , தருவைகுளம் காவல் ஆய்வாளர், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x