Published : 03 Aug 2020 06:31 PM
Last Updated : 03 Aug 2020 06:31 PM

சமூக இடைவெளி விதிதான் மாணவர்களுக்கு முட்டை வழங்கத் தடை என்றால் மதுக்கடைகளையும் மூட அரசு முடிவெடுக்குமா?- உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில், மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது எனக் கூறும் தமிழக அரசு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமுடியாத டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட முடிவெடுத்துள்ளதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு இலவச முட்டைகள் வழங்கவும், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கத் திட்டம் வகுக்கக் கோரியும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஆர்.சுதா பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கவும், தேவைப்படும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கவும் உத்தரவிட்டனர்.

முட்டை வழங்கும் பணியில் ஆசிரியர்களை பயன்படுத்தும்படியும், அதுகுறித்த திட்டமிடலைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 3-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 23 லட்சத்து 86 ஆயிரம் மாணவிகள் மற்றும் தாய்மார்களுக்கு 71 லட்சத்து 59 ஆயிரம் நாப்கின்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள செவிலியர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேசமயம் சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

முட்டை வழங்க முடியாது என்ற விளக்கத்தால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், "முட்டை வழங்க முடியாது என்பதற்குக் காரணங்களைச் சொல்லாதீர்கள். மாணவர்களுக்கு முட்டை எப்படி வழங்க முடியும் என்பதை முடிவெடுங்கள்” என உத்தரவிட்டனர்.

மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிலையில் முட்டை வழங்க முடியாது எனக் கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட முடிவெடுத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர், சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும், எப்படி வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அதற்காக ஆய்வு செய்து பதிலளிக்க ஒரு நாள் அவகாசம் வழங்கி வழக்கை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர். அரசு பதிலளிக்கும் வரை ஆசிரியர்களைக் கொண்டு முட்டை வழங்க வேண்டுமென கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x