Published : 03 Aug 2020 03:40 PM
Last Updated : 03 Aug 2020 03:40 PM

மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்றுத் திரிபவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று பொது இடங்களில் சுற்றித் திரிபவர்களை மாற்றுத்திறனாளிகள் ஆணைய உறுப்பினர்கள் கண்டறிந்து, அவர்களை அரசு காப்பகங்களில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்தது. இதுதவிர சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்பத்தார் கைவிட்ட நிலையில், சாலையோரம் அவர்கள் சுற்றித் திரிவதைச் சாதாரணமாகப் பார்க்கலாம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பல தொண்டு நிறுவனங்கள் மீட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளித்து குடும்பத்தாருடன் சேர்த்துவைக்கும் நிகழ்வுகளும் உள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் இந்தப் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “மனநலம் பாதிக்கப்பட்டு பலர் தற்போது பல்வேறு பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். அதில் பலருக்குக் கரோனா தொற்று உள்ளது. ஆனால், அவர்களுக்குப் போதிய உணவும் தங்குமிடமும் இல்லை. எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி சரிசெய்ய உத்தரவிட வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், இது தொடர்பாக தனியார் நாளிதழில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி, குறிப்பாக பழனி மலையைச் சுற்றி மனநலம் பாதிக்கப்பட்ட பலர் சுற்றித் திரிவதாகத் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, “தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து அந்தப் பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு காப்பகத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கையை வருகிற 18 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x