Last Updated : 03 Aug, 2020 02:17 PM

 

Published : 03 Aug 2020 02:17 PM
Last Updated : 03 Aug 2020 02:17 PM

மேகமலை வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: தேனி ஆட்சியர், வனக்காவலருக்கு நோட்டீஸ்

மதுரை

மேகமலை வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டி தொடரப்பட்ட வழக்கில் தேனி ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப் பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் என்ற திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், " தேனி மாவட்டம் இயற்கையின் கொடையாக அதிக வனப் பகுதியை கொண்டதாகும். சுமார் 1.05 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியில் மேகமலை வனப் பகுதியும் அடங்கியுள்ளது. இந்த பகுதியில் உருவாகும் ஊற்று நீர் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரில் பெரும் பங்கு வகிக்கிறது. வைகை ஆற்று நீரின் பகுதியும் இதை நம்பியுள்ளது.

இந்த நீரை நம்பித்தான், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

மேகமலை வனப்பகுதியின் தொடர்ச்சியாக பெரியாறு புலிகள் சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயமும் அமைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள சிலர் வியாபார நோக்கில் மலைமாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த மாடுகளை வளர்ப்பதால் இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் லாபம் கிடைப்பதால், ஏராளமான மாடுகளை வளர்க்கின்றனர்.
இதேபோல் சிலர் ஆடு வகைகளையும் வளர்த்து வருகின்றனர். அவற்றை, மேகமலை வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக விடுகின்றனர்.

இவை மேகமலை வனப்பகுதியில் உள் பகுதிகள் வரை சென்று, புல், மரம் போன்றவற்றை அழித்து வருகின்றன.இதனால் வனப்பகுதிகள் அழிந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் யானைகள், மான்கள் பாதிக்கப்படுகின்றன.

மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்கள் கால்நடைகள் பாதிக்கப்படக்கூடாது எனும் நோக்கில், புலிகள் போன்ற உயிரினங்களுக்கு விஷம் வைக்கும் சூழலும் உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விலங்குகள் அருகே உள்ள கேரள வனப்பகுதிக்கு இடம்பெயருகின்றன. குடியிருப்பு பகுதிக்கு வரும் சூழலும் உள்ளது.

ஒரு சிலரின் லாப நோக்கத்திற்காக வனப்பகுதி அழிவதுடன் மழை வளமும் பாதிக்கப்படுகிறது. மேலும் வனஉயிரினங்களும் பாதிக்கப் படுவதால், மேகமலை வனப்பகுதியில் இது போன்ற வளர்ப்பு வகை பிராணிகளை மேய்ச்சலுக்கு செல்வதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வனப்பகுதி, வனவிலங்கு பாதுகாப்பு விதிகள் இருப்பினும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் வனத்துறை முதன்மை செயலர்கள், தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட வனக்காவலர் உள்ளிட்டோர் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x