Last Updated : 03 Aug, 2020 12:17 PM

 

Published : 03 Aug 2020 12:17 PM
Last Updated : 03 Aug 2020 12:17 PM

சாத்தான்குளம் வழக்கு; காவலர் முருகனுக்கு ஜாமீன் வழங்க ஜெயராஜ் மனைவி எதிர்ப்பு- சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர் முருகனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கொல்லப்பட்ட ஜெயராஜ் மனைவி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையக் காவலர் முருகன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் 2 வாரத்துக்கு முன்பு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து முருகன் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜூலை 1 முதல் சிறையில் உள்ளேன். சம்பவத்தின் போது இரவில் வேறு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டு சுமார் 8.15 மணியளவிலேயே காவல் நிலையம் திரும்பினேன். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பான தட்டச்சு செய்யப்பட்ட புகார் மனுவில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கட்டாயப்படுத்தினார்.

அவர் கட்டாயப்படுத்தியதாலும், உயர் அதிகாரி என்பதாலும் நான் கையெழுத்திட்டேன். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகமாட்டேன். நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முருகனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் மனு தாக்கல் செய்தார்.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல் வாதிடுகையில், பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ-க்கு அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x